Home இலங்கை புலிகளின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வருவதற்கு கதவு திறக்கப்பட்டுள்ளது – விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

புலிகளின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வருவதற்கு கதவு திறக்கப்பட்டுள்ளது – விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

0
image

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வருவதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.

கொழும்பில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைப் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பணமோசடி தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம், பணமோசடி குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய வங்கியின் விசேட குழுவொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்குழு தீர்மானித்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் கூட செல்ல முடியாதவாறு கறுப்புப் பணத்துக்குப் பெரிய கதவு திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வரும்போது, நாட்டின் காணி நிலங்களையும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலுள்ள சொத்துக்களையும் அவர்களால் எளிதாக வாங்க முடியும்.

அதற்குத் தடையாக இருந்த மகாவலி அபிவிருத்தி அதிகார சபையை இல்லாது ஒழிக்கும்போது, அதன் கீழ் இருந்த வடக்கு மற்றும் கிழக்கின் அனைத்து காணி நிலங்களும் பிரதேச செயலாளர்களின் கீழ் கொண்டு செல்லப்பட்டு, அந்தக் கறுப்புப் பணத்தைக் கொண்டு தமக்குத் தேவையான சொத்துக்களை தடையின்றி வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்படுகின்றது.

 

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைந்து மின்சார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களை விற்க முற்படும் போது, அந்த முக்கிய இடங்களை மிக மலிவான விலைக்கு வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் உருவாகும். இதற்குத் தடையாக இருக்கும் விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் சட்டத்துக்கும், தொல்பொருள் சட்டத்ததுக்கும் இப்போது சூழ்ச்சி செய்யப்போகிறார்கள். இந்தத் துரோகங்களுக்கு எதிராகப் போராடக்கூடிய பௌத்த துறவிகளையும் சமூகக் கட்டமைப்பையும் அடித்து வீழ்த்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெரும் ஆயுதக் கப்பல்கள் கரைக்கு வருவதற்கு முன்பே நடுக்கடலில் தாக்கி அழித்த நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய, இலங்கை கடற்படை வரலாற்றில் மிக உயர்ந்த கௌரவமான ‘அட்மிரல் ஒஃப் த ப்ளீட்’ பதவியை வகிக்கும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமையானது இந்த அரசாங்கத்தின் குறுகிய அரசியல் பழிவாங்கலையே காட்டுகின்றது

நாட்டின் ஹீரோக்களை நீதிமன்றங்களுக்கும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுக்களுக்கும், சிறைச்சாலைகளுக்கும் இழுத்தடித்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 04 ஆம் மாடியில் தடுத்து வைத்து அவமதிப்பதன் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு அரசாங்கம் வழங்கும் முன்மாதிரி என்ன என்ற கேள்வி எழுகின்றது.

இந்த அரசாங்கத்துக்குச் சொம்பு தூக்கும் சிலருக்கு இந்த வீரப் பதக்கங்கள் வெறும் தொங்கும் தகரங்களாகத் தோன்றலாம், அப்படியென்றால் அவர்கள் வாங்கிய சட்டப் பட்டப் படிப்பும் வெறும் காகிதக் கிழிசல் தான். அந்த ஒவ்வொரு பதக்கத்துக்குப் பின்னாலும் ஒரு வீர வரலாறு இருக்கிறது எனவும் தெரிவித்தார். 

Source: https://samugammedia.com/the-door-has-been-opened-for-the-black-money-of-tigers-to-come-into-the-country—vimal-weerawansas-allegation-1783231581

NO COMMENTS

Exit mobile version