Home இலங்கை புளியங்குளம் விபத்து பேருந்து உரிமையாளரை விடுவித்த நீதிமன்றம்

புளியங்குளம் விபத்து பேருந்து உரிமையாளரை விடுவித்த நீதிமன்றம்

0
image

வவுனியா, புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிரபல சொகுசுப் பேருந்தின் உரிமையாளர், வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திலேயே பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, இடம்பெற்ற விபத்து தொடர்பான மேலதிக வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, குறித்த சொகுசுப் பேருந்து சேவையின் உரிமையாளர் கடந்த செவ்வாய்க்கிழமை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அங்கு சென்ற அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பேருந்து உரிமையாளர் புதன்கிழமை (ஆகஸ்ட் 05) வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரணை செய்த நீதவான், பேருந்து உரிமையாளரை விடுவித்து உத்தரவிட்டார். அதேவேளை, விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதியைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற விடுதலையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பேருந்து உரிமையாளர்,

புளியங்குளத்தில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். போக்குவரத்து நடவடிக்கைகளின் போது விபத்துகள் எதிர்பாராமல் நிகழக்கூடியவை என்றாலும், அன்றைய தினம் நடந்த சம்பவத்தை எங்களால் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.

குறித்த விபத்தினால் உயிரிழந்த குடும்பஸ்தரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இதற்காக நாங்கள் மனப்பூர்வமாக வருந்துவதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்,” எனக் குறிப்பிட்டார்.

Source: https://samugammedia.com/puliyankulam-accident-court-releases-bus-owner-1786258346

NO COMMENTS

Exit mobile version