Home இலங்கை பெண் வைத்தியர் கொலை வழக்கு; பொலிஸ் உயர் அதிகாரி கைது! 3 சந்தேகநபர்களுக்கு தடுப்புக் காவல்...

பெண் வைத்தியர் கொலை வழக்கு; பொலிஸ் உயர் அதிகாரி கைது! 3 சந்தேகநபர்களுக்கு தடுப்புக் காவல் உத்தரவு

0
image

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் கொலை வழக்கு விசாரணையில் முக்கிய திருப்பமாக, குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், வழக்கின் பிரதான சந்தேகநபருக்கும் அவரது மனைவிக்கும் தலைமறைவாக இருக்க உதவி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் மற்றொரு சந்தேகநபரை 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நுவரெலியா நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. பின்னர் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் காதலர் எனக் கூறப்படும் பிரதான சந்தேகநபரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டார்.

வெள்ளவத்தையிலிருந்து பேருந்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்தபோது, மாறு வேடத்தில் இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், யாழ்ப்பாணம் வழியாக கடல் மார்க்கத்தில் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்திருக்கலாம் என்ற சந்தேகத்திலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகி வருவதுடன், கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Source: https://samugammedia.com/female-doctor-murder-case-senior-police-officer-arrested-3-suspects-given-remand-orders-1782438556

NO COMMENTS

Exit mobile version