Home இலங்கை பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை

பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை

0
image

பொதுப் போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தும் இடங்களை மறைக்கும் வகையில் ஏனைய வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து நிறுத்தங்களில் ஏனைய வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகளை வீதியின் நடுவில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுவதுடன், இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகளுடன் பயணிக்கக்கூடிய பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான பேருந்துகள் பேருந்து நிறுத்தங்களை தடையின்றி அணுகுவதற்கு உரிய இடங்கள் திறந்த நிலையில் இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து நிறுத்தங்களில் ஏனைய வாகனங்களை நிறுத்துவதால் மாற்றுத்திறனாளிகள் மட்டுமன்றி ஏனைய பயணிகளும் பேருந்துகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, பேருந்து நிறுத்தங்களை அணுகும் திசையில் 30 மீற்றர் தூரத்திற்குள்ளும், வெளியேறும் திசையில் 15 மீற்றர் தூரத்திற்குள்ளும் ஏனைய வாகனங்களை நிறுத்துவதைத் தடை செய்யும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், பேருந்து ஒதுக்கிடங்கள் (Bus Bays) அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தங்களில், அணுகும் திசையில் 15 மீற்றருக்குள்ளும், வெளியேறும் திசையில் 10 மீற்றருக்குள்ளும் வாகனங்களை நிறுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து, அவர்கள் பாதுகாப்பாகப் பேருந்துகளில் ஏறி இறங்குவதற்கு வசதியாக, பேருந்து நிறுத்தங்களில் ஏனைய வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/police-warning-strict-legal-action-if-vehicles-stop-at-bus-stops-1786769538

NO COMMENTS

Exit mobile version