பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலியான ஆள்மாறாட்டம் செய்து சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, போலி புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுடன் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அல்லது பொலிஸ் விசாரணைப் பிரிவுகளிலிருந்து அழைப்பதாகக் கூறி மோசடிகளில் ஈடுபடும் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்குகள் பணமோசடிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, வழக்குத் தொடரப்படும் என தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களை அச்சுறுத்தி, பின்னர் போலியான விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவோர், வட்ஸ்அப் ஊடாக போலி பொலிஸ் அடையாளச் சின்னங்கள், அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் போலி ஆவணங்களை அனுப்பி நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர்.
மேலும், ‘Verification’ நடவடிக்கைகளுக்காக முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிப்பதாகக் கூறி OTP இலக்கங்களைப் பெற்றுக்கொள்வது, வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றுமாறு கோருவது அல்லது USDT போன்ற கிரிப்டோ நாணயங்கள் மூலம் பணம் செலுத்துமாறு அழுத்தம் கொடுப்பது போன்ற மோசடி நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு அரச அல்லது தனியார் நிறுவனமும் தொலைபேசி அழைப்புகள் அல்லது வட்ஸ்அப் ஊடாக தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கிக் கணக்கு விபரங்கள், அட்டை இலக்கம், CVV இலக்கம், கடவுச்சொல் அல்லது OTP இலக்கங்களை கோருவதில்லை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, இவ்வாறான தகவல்களைக் கோரும் அழைப்புகள் மோசடியானவை என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும், கணக்கு முடக்கப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சுறுத்தல்களுக்கு பயந்து பணத்தை மாற்ற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் கிடைத்தால், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
