முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள் இன்று (20) பிற்பகல் பொலிஸ் மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.
நாட்டின் 35ஆவது பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன, தனது 63ஆவது வயதில் உயிரிழந்தார்.
1986ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். பின்னர், 2020ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி அவர் பொலிஸ் மா அதிபராக பதவியேற்றார்.
2023ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த போதிலும், புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படும் வரை அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பலமுறை சேவை நீடிப்பு வழங்கப்பட்டதால், அவர் மேலும் சுமார் எட்டு மாதங்கள் பதவியில் தொடர்ந்தார். இறுதியாக, 2023ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி அவர் ஓய்வு பெற்றார்.
சி.டி. விக்ரமரத்ன கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நிலையில், அவரது மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன. ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரது பாதுகாப்பு அதிகாரிக்குச் சொந்தமான துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, அவரது சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி பகிரங்க தீர்ப்பை வழங்கியுள்ளார். மேலும் ஆய்வுகளுக்காக உடல் உறுப்புகள் அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கியும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மாலபே பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது மனைவி மற்றும் மூன்று பாதுகாப்பு அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Source: https://samugammedia.com/police-respectfully-conducted-cd-vikramaratnes-final-rites-today-1784522569
