Home இலங்கை போராடிய ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்த பிரதி அமைச்சர்!

போராடிய ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்த பிரதி அமைச்சர்!

0
image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரிப் போராடிய ஊடகவியலாளர்களைச் சந்திக்க மறுத்த ஊடகப் பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம், இந்த அரசு ஊடகவியலாளர்களுக்கு எப்போதுமே நீதியைப் பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என்பது தெள்ளத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது என்று யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கே. செல்வகுகுமார் தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஊடகவியலாளர்கள் நேற்று முன்னெடுத்த கவனவீர்ப்புப் போராட்டத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுடன் இணைந்து பணியாற்றிய 39 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்த அரசும் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. புதிய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் விசாரணைகளைத் துரிதப்படுத்தாததைக் கண்டித்தே நாம் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

கடந்த காலங்களில் நாம் கோரிக்கைகளை விடுத்தபோது ஊடக அமைச்சர்கள் எங்களுடன் பேசி எமது வலிகளையும் வேதனைகளையும் கேட்டறிந்தனர். ஆனால், தற்போதைய ஊடகப் பிரதி அமைச்சர் எங்களைச் சந்திக்க மறுத்துள்ளார். ஊடகவியலாளர்களை இந்த அரசு எவ்வாறு கையாள்கின்றது என்பதையே இது காட்டுகின்றது.

நாம் மாவட்ட செயலக பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டபோது, நுழைவாயிலருகில் எம்மை நிற்கவிடாது அப்புறப்படுத்துமாறு மாவட்ட செயலர் பொலிஸாருக்குப் பணித்துள்ளார். தமது பதவிகளைத் தக்கவைப்பதற்காக இப்படி நடப்பது வேதனையாகவும் கேவலமான செயலாகும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஊடகவியலாளர் படுகொலைகளை விசாரிப்போம், விசாரணைக் கோவைகளைக் கைகளில் எடுப்போம் என உறுதி கூறினர். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த வாக்குறுதிகள் கைவிடப்பட்டுள்ளன. இந்த அரசு வாய் மூலமாகக் கூறும் அனைத்தும் பொய்களே என்பது இதன் மூலம் புலனாகின்றது.

யாழ். ஊடக மையம் யார் வந்தாலும், என்ன செய்தாலும் எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்கும்.

மாவட்ட செயலகத்துக்கு வெளியே நாம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, உள்ளே சில ஊடகவியலாளர்களை மட்டும் அழைத்துச் செயலமர்வு நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஊடகச் செயலமர்வை நடத்திவிட்டதாகக் காட்ட முற்படுகின்றார்களே தவிர, ஊடகவியலாளர்களின் கருத்துக்களையும் பிரச்சினைகளையும் கேட்க இந்த அரசு தயாராக இல்லை.” – என்றார்.

Source: https://samugammedia.com/deputy-minister-refuses-to-meet-protesting-journalists-1785548432

NO COMMENTS

Exit mobile version