Home இலங்கை மதுசார வீணடிப்பு வரம்பைக் குறைக்கும் தீர்மானத்திற்கு மதுபான உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு

மதுசார வீணடிப்பு வரம்பைக் குறைக்கும் தீர்மானத்திற்கு மதுபான உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு

0
image

மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப் மதுவரித் திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு நாட்டின் மதுபான உற்பத்தியாளர்கள் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். 

மதுவரித் திணைக்களத்தின் இந்த புதிய அறிவிப்பினால், தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு 23 பில்லியன் ரூபாயை மிகப்பெரிய வரிப் பணமாகச் செலுத்தி வரும் நாட்டின் முன்னனி நிறுவனங்கள் மீண்டும் ஒருமுறை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இதன் காரணமாகத் தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேலும் முன்னெடுத்துச் செல்வது கடினமாகி உள்ளதாக அந்நிறுவனங்கள், மதுவரித் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளன. 

மதுபான உற்பத்தியின் போதும் சேமிப்புச் செயற்பாடுகளின் போதும் மதுசாரம் ஆவியாதல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாவதாக உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

குறிப்பாக, போத்தல்களில் அடைக்கும் இயந்திரங்களுக்குச் மதுசாரத்தைச் செலுத்தும் போதும், நவீன இயந்திரங்கள் மூலம் போத்தல்களில் அடைக்கும் செயற்பாடுகளின் போதும் இவ்வாறு அதிகளவில் மதுசாரம் ஆவியாகின்றது. 

இது தவிர, அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் மதுபானப் போத்தல்களைச் சமர்ப்பிக்கும் போது, மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்படும் மதுபானப் போத்தல் தொகுதிகளும் இந்த வீணடிப்புச் சதவீதத்தின் கீழேயே கணக்கிடப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எனவே, இந்த மதுசார வீணடிப்புச் சதவீதத்தைக் குறைப்பதற்கு முன்னர், இந்த வீணடிப்புகள் எவ்வாறு நிகழ்கின்றன, எதன் அடிப்படையில் நிகழ்கின்றன மற்றும் அதற்குப் பங்களிக்கும் அறிவியல் காரணிகள் யாவை என்பது குறித்து சரியான, நடைமுறைச் சாத்தியமான மற்றும் அறிவியல் பூர்வமான பரிசோதனையை மேற்கொள்வது அத்தியாவசியமானது என உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 

Source: https://samugammedia.com/alcohol-producers-oppose-the-decision-to-reduce-the-limit-for-alcohol-wastage-1785211703

NO COMMENTS

Exit mobile version