Home இலங்கை மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை! – அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை! – அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்

0
image

கட்சிக் கூட்டங்களுக்கு மதுபானம் அருந்தாமல் வருமாறு யாருக்கும் அறிவுறுத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற தமது கட்சியின் கூட்டத்தில் ஏழை விவசாயிகளும் தொழிலாளர்களும் பங்கேற்றிருந்ததாகவும், அவர்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் திரிபுபடுத்தப்பட்ட காணொளிகள் பரப்பப்பட்டு வருவதாகவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வருடாந்தம் பெருமளவு மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதனை இலங்கையர்களே பயன்படுத்துவதாகவும் தெரிவித்த அவர், மதுபானம் அருந்துவதா இல்லையா என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமது கூட்டங்களுக்கு மதுபானம் அருந்தி வருமாறு கட்சி சார்பில் யாருக்கும் கூறப்படவில்லை என்றும், கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மதுபானம் வாங்கிக் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாட்டின் நவீன வரலாற்றில் ஆட்சிக்கு வந்து வெறும் இரண்டு வருடங்களுக்குள் இவ்வளவு பலவீனமடைந்து மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கம் இதுவே முதல்முறை எனவும் சாகர காரியவசம் விமர்சித்துள்ளார்.

பொதுஜன பெரமுன அனுராதபுர பேரணியை ஏற்பாடு செய்ததை அறிந்த பின்னரே ஜனாதிபதியும் அரசாங்கமும் நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னாள் தலைவர்கள் தேர்தல் இல்லாத காலங்களில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிப்பதற்காக கூட்டங்களை நடத்தியதாகவும், ஆனால் தற்போதைய ஜனாதிபதி எவ்வித அபிவிருத்தித் திட்டங்களும் இன்றி, தேர்தலுக்கு முன்னர் வழங்கியதைப் போன்ற வாக்குறுதிகளை மீண்டும் வழங்கி கூட்டங்களை நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நாட்டின் நிதியும் மக்களின் நேரமும் வீணடிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதற்குப் பொறுப்பானவர்கள் அடுத்த அரசாங்கத்தில் விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், பொலன்னறுவை மற்றும் அனுராதபுரத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரைகளில் நாட்டின் அபிவிருத்தி குறித்து பேசுவதற்குப் பதிலாக பொதுஜன பெரமுனவையும் அதன் தலைவர்களையும் தொடர்ந்து விமர்சித்து வருவது, அவரது தோல்வியை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு, வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை, கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும் அதிகரித்த வாழ்க்கைச் செலவு காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/didnt-buy-alcohol–sagar-kariya-explains-about-the-anuradhapura-gang-1789446626

NO COMMENTS

Exit mobile version