Home இலங்கை மத ரீதியான ஆடைகளுக்கு அனுமதி வேண்டாம் – கல்முனை வைத்தியசாலையில் போராட்டம்

மத ரீதியான ஆடைகளுக்கு அனுமதி வேண்டாம் – கல்முனை வைத்தியசாலையில் போராட்டம்

0
image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் சீருடை விவகாரத்தை பூதாகரமாக்கி, வைத்தியசாலைக்கு எதிராக இனரீதியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறி, அதனை கண்டித்து இன்று (17) கவன ஈர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில், சிற்றூழியர்களின் சீருடை அணியாமல் மதசார்பு ஆடை அணிந்து வருகை தரும் புதிய நியமனம் பெற்ற 9 பேரின் சீருடை அவமதிப்பை எதிர்த்து  இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆறு தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில், அரச சுற்றுநிருபத்தின் அடிப்படையில் தாங்கள் சீருடை அணிந்து கடமையாற்றி வருவதாகவும், சீருடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை சில தரப்பினர் இனவாத ரீதியில் முன்னெடுத்து வருவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதன்போது, “சீருடையின்றி வருபவர்களை கடமைக்கு அனுமதிக்காதே”, “அனைவருக்கும் பொதுவான சீருடையை அணிய அனுமதியுங்கள்”, சமூக வலைத்தளங்களே எங்களைக்கொல்லதே, “சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை உடனடியாக அமுல்படுத்து”, “வைத்தியசாலைக்கு எதிராக அவதூறுகளை பரப்பாதீர்கள்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மத ரீதியான ஆடைகளுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது என்றும், நிர்வாகத்திற்கு கட்டுப்படாத புதிய பெண் ஊழியர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், சட்டம் கலாச்சார ஆடைகளை அங்கீகரிக்குமானால், சீருடை என்ற நடைமுறையை நீக்க வேண்டும் அல்லது அனைத்து மதத்தவருக்கும் சீருடை விலக்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், தேசிய மட்டத்தில் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Source: https://samugammedia.com/no-permission-for-religious-attire—protest-at-kalmunai-hospital-1786948366

NO COMMENTS

Exit mobile version