மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு புதியவர்கள் பலர் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்வேறு தரப்பினரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருவது, மக்கள் மத்தியில் ஜனநாயக ரீதியான அரசியல் பங்களிப்புக்கான ஆர்வம் அதிகரித்து வருவதையே வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச வட்டார உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதாக அடிக்கடி செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், கட்சிகள் மாத்திரமன்றி சமூகத்தின் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த புதியவர்கள் அரசியல் களத்தில் களமிறங்குவதற்கு விருப்பம் வெளியிட்டு வருவது வரவேற்கத்தக்க விடயமாகும்.
இதேவேளை அரசியல் என்பது குறிப்பிட்ட சிலருக்கான துறையாக மட்டுப்படுத்தப்படாமல், மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் தமது பங்களிப்பை வழங்குவதற்கான களமாக அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் புதியவர்கள் அரசியலுக்குள் வருவதன் ஊடாக புதிய சிந்தனைகள், புதிய அணுகுமுறைகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புதிய செயற்றிட்டங்கள் முன்வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும் எனவும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.
அந்தசகையில் தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு தரப்பினரும் ஆர்வம் செலுத்துவருவது ஜனநாயக சூழலை மேலும் வலுப்படுத்தும் எனத் தெரிவித்த அவர், மக்கள் தங்களது அரசியல் விருப்பங்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும் தங்களுக்கு பொருத்தமான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படுவது அவசியம் எனவும் கூறினார்.
மாகாண சபைகள் மக்களின் அன்றாட வாழ்வுடன் நேரடியாக தொடர்புபட்ட பல்வேறு விடயங்களில் முக்கிய பங்காற்றக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பாக இருப்பதால், அவற்றின் செயற்பாடுகளில் திறமையானதும் மக்கள் சார்ந்ததுமான பிரதிநிதித்துவம் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, தொடர்ச்சியாக நாம் எதை வலியுறுத்தி வப்திருந்தோமோ அதுவே இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எப்த வகையில் எமது பாதையே நன்மைதரும் ஒன்றாக இருக்கின்றது என்பதை மக்கள் இன்று உணர்ந்துகொண்டுள்ளனர்.
அந்தவகையில் கட்சியின் வட்டாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி எந்த தேர்தல்கள் வந்தாலும் கட்சி உறுப்பினர்கள் தமது பிரதேச மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த கூட்டத்தின் போது கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக் செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்,தென்மராட்சி பிரதேச நிர்வாக செயலாளர் மெடிஸ்கோ, மேலதிக நிர்வாக செயலாளர் தர்சன், மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் செயற்பாட்டாகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
