டெங்கு காய்ச்சல் பரவும் அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக, பள்ளி மாணவர்கள் கொசுக்கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிய கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்
பள்ளிகளில் பயிலும் மாணவர்களை டெங்கு கொசுக்கடியிலிருந்து பாதுகாப்பதே இந்த புதிய நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதற்கென, தற்போதுள்ள பள்ளிச் சீருடையுடன் கூடுதலாக, மாணவர்களின் கைகள் மற்றும் கால்களை முழுமையாக மறைக்கக்கூடிய பொருத்தமான ஆடைகளை அணிய அனுமதிக்குமாறு அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், டெங்கு பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் கொசு விரட்டிகளை (Mosquito Repellents) மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வையும், கல்வியையும் வழங்குமாறு பள்ளி முதல்வர்களுக்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
