மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களுக்குச் சமூகத்தில் உரிய அங்கீகாரத்தையும் சம வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுப்பதற்குத் தற்போதைய அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி நிதியத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட “சரசவி திரியோ அபிமன்” நலன்புரி உதவிகள் மற்றும் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் கொழும்புக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் மற்றும் புலமைப்பரிசில் திட்டங்கள், வட பகுதி மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தன.
குறிப்பாக யாழ். மாவட்டத்தில் இருந்து விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இந்த நிலையை முற்றாக மாற்றி, அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகள் மூலமாகவும் எமது பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டங்கள் நேரடியாகச் சென்று சேருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இயற்கை ரீதியாக மட்டுமன்றி, கடந்த காலப் போரின் வடுக்களால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ள எமது மக்களின் வாழ்வாதாரத்தையும் கல்வி உரிமையையும் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும் எனத் தெரிவித்த அமைச்சர், மாற்றுத்திறன் ஒருவரின் கனவுகளுக்கு ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது என்றும் அவர்களிடம் இருக்கும் திறமையும் விடாமுயற்சியும்தான் மிகப்பெரிய பலம் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இந்த உதவித்தொகை வெறுமனே ஒரு நிதியுதவி அல்ல என்றும், இது ஒரு மாணவரின் கல்விக் கனவுக்கு வழங்கப்படும் நம்பிக்கை, ஒரு குடும்பத்தின் எதிர்பார்ப்புக்கு வழங்கப்படும் பலம் மற்றும் சமூகத்தின் சமத்துவமான எதிர்காலத்திற்கான முதலீடு என்றும் அவர் குறிப்பிட்டார்.
பார்வைச்சவாலினைக் கொண்ட ஒருவர் இன்றைக்கு பாராளுமன்ற உறுப்பினராக அங்கத்துவம் வகித்து காத்திரமான உரைகளை ஆற்றி வருவது மாற்றுத்திறனாளிகளின் ஆளுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு எனக் கூறிய அவர், 23 வயதில் இறந்துவிடுவார் என மருத்துவர்களால் கூறப்பட்ட போதிலும், 76 வயது வரை வாழ்ந்து இயற்பியல் உலகில் புதிய சாதனைகளைப் படைத்த உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களை எமது மாற்றுத்திறனாளிகள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலான தற்போதைய அரசாங்கமானது சாதி, மத, பொருளாதார பேதங்களின்றி மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்தில் பின்தள்ளப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான அரசாங்கமாகும் எனத் தெரிவித்த அமைச்சர், இச்சிறப்பான திட்டத்தை நடைமுறைப்படுத்திய ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி நிதியத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். வாய்ப்பு கிடைத்தால் திறமை வெல்லும், கல்வி கிடைத்தால் கனவுகள் நனவாகும் என்பதால், மாற்றுத்திறனாளி மாணவர்களின் உரிமை, கல்வி மற்றும் சமவாய்ப்பை உறுதிப்படுத்தும் பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, வட மாகாண ஆளநர் நாகலிங்கம் வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அரச அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
