இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் மீனவர் பிரச்சினைகள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, இலங்கை அதிகாரிகள் குழு எதிர்வரும் 25 ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்று கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தப் பயணம் கச்சதீவு தொடர்பில் விவாதிப்பதற்கானதல்ல. மாறாக, இந்தியாவிலிருந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிவரும் இழுவைப்படகுகளினால் வடக்கு கடற்பரப்பின் கடல்வளம் மற்றும் வட பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்துக் கலந்துரையாடுவதற்கே இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது மற்றும் கடல் எல்லையைப் பாதுகாப்பதற்கே இந்தச் சந்திப்பில் முக்கியத்துவம் வழங்கப்படும்.
கச்சதீவு இலங்கைக்கு உரித்தானது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. சர்வதேசச் சட்டங்கள், இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் கடல் எல்லை நிர்ணயம் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் கச்சதீவு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டதாகும்.
தமிழக அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் இருப்பு மற்றும் வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காகவுமே கச்சதீவை மீளப் பெற வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை மையமாகக் கொண்டு சஜித் பிரேமதாஸ மற்றும் ரணில் விக்கிரமசிங்க தரப்புகளுக்கு இடையில் இடம்பெறும் அரசியல் போட்டி மக்களின் நலனுக்காக அல்ல.
கடந்த காலங்களில் நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அரசியல் சக்திகள், தங்கள் மீதான சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே இதுபோன்ற அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு எதிர்க்கட்சிகளின் சலசலப்புகளுக்கு இடமளிக்காமல், நாட்டின் எதிர்கால நலனை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.” – என்றார்.
Source: https://samugammedia.com/sri-lankan-officials-to-visit-india-to-resolve-fishermen-issue-1788580444
