நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்ததன் மூலம், அரசு தனது இயலாமையை மறைக்க முற்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“யார் தவறு செய்திருந்தாலும் அது குறித்து விசாரணை நடத்திச் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்லர்.
அரசுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் மீது மட்டுமே இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தொடர்ச்சியாக விசாரணைகளை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
மாறாக, துறைமுகத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை மற்றும் தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி போன்ற அரசாங்க தரப்பினர் மீதான முறப்பாடுகள் குறித்து எந்த விசாரணையும் இடம்பெறுவதில்லை.
அடுத்த வாரம் அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் மக்கள் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ள நிலையில், நாமல் ராஜபக்ஷவின் இந்தைக் கைது அந்தக் கூட்டத்துக்குப் போதுமான இலவசப் பிரசாரத்தையே வழங்கி இருக்கின்றது.
மக்களுக்குச் செய்ய வேண்டிய பல முக்கியமான விடயங்களை மறந்துவிட்டு, எதிர்க்கட்சியினரைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கே அரசு முன்னுரிமை அளித்து வருகின்றது. இதன் மூலம் தனது இயலாமையை மறைக்கவே அரசு முயற்சிக்கின்றது.” – என்றார்.
