Home இலங்கை முன்னாள் அமைச்சர் பிரேமலால் உட்பட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் உட்பட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை!

0
image

கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதைத் தடுத்து உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வேங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வெளிநாட்டுப் பயணத் தடையைக் குடிவரவு – குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு உடனடியாக அறிவிக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டதுடன், பிரதிவாதிகள் மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் கூட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் இரத்தினபுரி மேல் நீதிமன்றம் பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.

பின்னர், அந்த மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராகப் பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர்களைக் குற்றமற்றவர்கள் என விடுவித்து உத்தரவிட்டிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு சட்டத்துக்குப் புறம்பானது என்பதால் அதனைச் செல்லுபடியற்றதாக்கித் தண்டனை வழங்கி உத்தரவிடுமாறு கோரிப் பாதிக்கப்பட்ட தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார விடுத்த கோரிக்கையை அடுத்து, பிரதம நீதியரசர் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Source: https://samugammedia.com/three-people-including-former-minister-premalal-banned-from-traveling-abroad-1788587932

NO COMMENTS

Exit mobile version