முன்மொழியப்பட்டுள்ள வருடாந்த பஸ் கட்டணத் திருத்தம் முரண்பாடானதாக உள்ளது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்து வெளியிடுகையில், கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் வேண்டுமென்றே தவிர்த்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் தற்போது 10,000 க்கும் மேற்பட்ட குறுகிய தூர சேவை பஸ்களும், சுமார் 3,000 நீண்ட தூர சேவை பஸ்களும் இயக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விரு சேவைகளுக்கும் வெவ்வேறு கட்டண முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாக நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகள் குறைந்தால் கூட, குறுகிய தூர சேவைகளுக்கு வழங்கப்பட்டுள்ள 12 சதவீத கட்டண திருத்தம் மீள பரிசீலிக்கப்படுமா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், எரிபொருள் விலை குறைந்தாலும் குறுகிய தூர பஸ் கட்டணங்களை குறைப்பது சாத்தியமற்ற நிலை உருவாகலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தின் கீழ் நீண்ட தூர சேவைகளுக்கு 20 சதவீத கட்டண உயர்வு வழங்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலைமை காரணமாக, எதிர்காலத்தில் பஸ் போக்குவரத்து துறை கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
