முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளின் நீண்டகாலக் காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான உயர் மட்ட விசேட கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனவிரட்ன தலைமையில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். ஜெயக்காந் அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு நேற்றைய தினம் (13) இடம்பெற்றது.
கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்ட முக்கிய விடயங்கள்:
மாவட்டத்தில் உள்ள குளங்களைப் புனரமைத்தல், பாசனக் கால்வாய்களைச் சீரமைத்தல் மற்றும் அணைக்கட்டுகளைப் பலப்படுத்தும் அவசரப் பணிகள் குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டது.
விவசாய உற்பத்தியைப் பெருக்கத் தேவையான கூடுதல் நிலங்களை அடையாளம் காண்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் எல்லைப்படுத்தப்பட்டு முடங்கியுள்ள காணிகளை விடுவித்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
