Home இலங்கை முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

0
image

முல்லைத்தீவு – முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நாவலர்வீதி சீரமைப்பு வேலையில் ஒப்பந்தப் பிரச்சினை காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஐ.சி.டி.பி திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளரால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன், குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டபிற்பாடு குறைந்தபட்சம் மூன்று தொடக்கம் நான்கு மாதத்திற்குள் குறித்த நாவலர் வீதியின் சீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும் பதிலளித்தார்.

முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 17.06.2026நேற்று இடம்பெற்ற வீதி, போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி உபகுழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

குறிப்பாக அந்த வீதியை மிக அதிகளவான மக்கள் பயன்படுத்திவருகின்றனர்.

ஏறக்குறைய 2.5கிலோமீற்றர்தூரமான குறித்த நாவலர் வீதியானது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுக் காணப்படுகின்றது.

எனவே குறித்த வீதியைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஐ.சி.டி.பி வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் இதன்போது பதிலளிக்கையில்,

குறித்த நாவலர் வீதியானது வீதியானது உலகவங்கியின் நிதி ஒதுக்கீட்டில், ஐ.சி.டி.பி வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டது.

அந்தவகையில் குறித்த வீதியைச் சீரமைப்புச் செய்வதற்காக உரியவகையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதற்கமைய ஒப்பந்த நிறுவனமொன்றுடன் முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, இந்த வேலைத்திட்டம் அந்த ஒப்பந்த நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது.

குறித்த ஒப்பந்த நிறுவனம் பிறிதொரு ஒப்பந்தவேலையில் முறையற்ற விதத்தில் செயற்பட்டதன் காரணமாக கறுப்புப்பட்டியலில் சேர்க்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ஒப்பந்த நிறுவனத்துடன் மன்னார் மாவட்டத்தில் செய்துகொண்ட ஒப்பந்தமொன்றை முறையான நடைமுறைகளைப் பின்பற்றி முடிவுறுத்தியுள்ளோம். அந்த வேலைத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளியை மீளவும் கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அதன் பிற்பாடு இந்த நாவலர் வீதிச்சீரமைப்பு விடயத்தில் அந்த ஒப்பந்ததாரர் மிகவும் மந்தகதியில் செயற்பட்டுவருகின்றார்.

எனவே நாவலர் வீதியைச் சீரமைப்பதற்கு  நாம் அந்த ஒப்பந்ததாரருடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தினை முடிவுறுத்தி, மீண்டும் உரியவகையில் ஒப்பந்தப்புள்ளியைக் கோரி, வேறு ஒப்பந்ததாரரிடம் குறித்த ஒப்பந்த வேலையைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம்.

ஒரு ஒப்பந்ததாரருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முடிவுறுத்துவதற்கு சில நடமுறைகளை முறையாகப் பின்பற்றவேண்டியிருக்கின்றது. அந்த நடைமுறைகளைப் பின்பற்றியே ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தினை முடிவுறுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்த நடமுறைகளைப் பின்பற்றி ஒப்பந்தத்தை முடிவுறுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. ஆகவே நாம் அந்த நடமுறைகளைப் பின்பற்றியே ஒப்பந்தத்தினை முடிவுறுத்த வேண்டியுள்ளது.

குறிப்பாக நாவலர்வீதி சீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக  அந்த ஒப்பந்த நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை முடிவுறுத்திக்கொள்வதற்கு 75வீதமான நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டன.

இவ்வாறு அந்த நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை முடிவுறுத்திவிட்டு, மீண்டும் உரியவகையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு புதிய ஒப்பந்ததாரரிடம் இந்த வேலையை கையளிக்கவேண்டும்.

அந்தவகையில் புதிய ஒப்பந்ததாரரின் மூலம் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு ஆகக்குறைந்தது மூன்று தொடக்கம் நான்கு மாதங்களாவது தேவைப்படும் – என்றார்.

Source: https://samugammedia.com/ravikaran-mp-urges-the-renovation-of-mulliyawala-navalar-road-1781764680

NO COMMENTS

Exit mobile version