Home இலங்கை மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

0
image

எல் நினோ காலநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, நாட்டின் நீர் முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நீர் முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும், உரிய பதிலளிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வழமையாகவே உலர்ந்த காலநிலை நிலவுவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த வருடம் வறட்சி நிலை தீவிரமடையக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

இதேவேளை செப்டெம்பர் மாத மத்திய பகுதியில் வடகீழ் பருவமழை ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த மாதத்தில் மழைவீழ்ச்சி வழமையை விடக் குறைவாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

இதேவேளை, இந்த ஆண்டில் மேலதிகமாக 3 இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்காக, 175 பில்லியன் ரூபாய் மதிப்பிலான குடிநீர் வழங்கல் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக, தம்புத்தேகம குடிநீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ,இன்று (10) மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

32 பில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 25,000 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கவுள்ளது.

இதேவேளை, கெபித்திகொல்லாவ – ஹொரவபொத்தான குடிநீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாணப் பணிகளும்  ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் நிதி உதவியுடன் 52 பில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், 50,000 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://samugammedia.com/the-government-is-taking-action-to-provide-clean-drinking-water-to-three-lakh-families-1783660783

NO COMMENTS

Exit mobile version