வவுனியாவில் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகையை அறவிட்டு இரத்தப் பரிசோதனை மேற்கொண்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 67ஆம் இலக்க உத்தரவின் அடிப்படையில், வவுனியா மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணை அதிகாரிகளால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஜூலை 14ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது, வவுனியா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள குறித்த தனியார் வைத்தியசாலை, FBC இரத்தப் பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணமான 400 ரூபாவுக்கு பதிலாக 550 ரூபா அறவிட்டமை கண்டறியப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, குறித்த வைத்தியசாலைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கில் முன்வைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்த நீதிமன்றம், குறித்த தனியார் வைத்தியசாலைக்கு 500,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இதேவேளை, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகையை அறவிடும் தனியார் வைத்தியசாலைகள் அல்லது மருத்துவ ஆய்வகங்கள் தொடர்பான தகவல்களை அலுவலக நேரங்களில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
