முன்னாள் ஆளுநரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயருமான ஏ.ஜே.எம். முஸம்மிலின் மகனான மொஹமட் இஷாம் ஜமால்தீன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
47 வயதுடைய மொஹமட் இஷாம் ஜமால்தீன், நேற்று (02) பிற்பகல் 1.45 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 விமானத்தில் லண்டன் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நிதி மற்றும் மோசடி குற்ற விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையொன்றுடன் தொடர்புடையதாக அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாகவே அவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஜமால்தீன் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கட்டுமானத் திட்டமொன்றுக்காக செலுத்த வேண்டிய 3.6 கோடி ரூபாய் பணத்தை செலுத்தத் தவறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
