இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
வழக்கு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்காக (Pre-Trial Conference) அழைக்குமாறு உத்தரவிட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு தேவையான தகுதிகள் இல்லாத போதிலும், அவரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ராயல் கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றம் இழைக்கப்பட்டதாகக் கூறியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
