வடமாகாண சிறுநீரக நோயாளர்களுக்கு 10 இலட்சம் மானியத்துடன் குறைந்த செலவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முன்னெடுக Melsta வைத்தியசாலை நடவடிக்கை எடுத்துள்ளதாக குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான வைத்தியர் கே. தியாகராஜா தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இது தொடர்பிலான ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில் –
எமது இந்த திட்டமானது Melstacorp CSR நிதியின் கீழ் 10 இலட்சம் ரூபாய் விசேட நிதி நிவாரணத்துடன் Melstacorp PLC நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமான Melsta Hospital Ragama, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தைச் சேர்ந்த சிறுநீரக நோயாளர்கள் அதிநவீன மாற்று அறுவை சிகிச்சைகளை மிகவும் இலகுவாகப் பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட விசேட மருத்துவ உதவித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக இலங்கையில் சிறுநீரகம் சார்ந்த நோய்த்தாக்கங்கள் அதிகரித்து வருவது பல குடும்பங்களுக்குப் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் சுமையாக மாறியுள்ளது.
குறிப்பாக, வடமாகாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வரும் நோயாளர்கள் தங்களது பிரத்தியேக மருத்துவக் கட்டணங்களுக்கு அப்பால், நீண்டதூரப் போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் உணவு போன்ற தேவைகளுக்காகப் பாரிய கூடுதல் செலவுகளைச் சுமக்க வேண்டியுள்ளது.
போதிய நிதி வசதியின்றி தத்தமது பிரதேசங்களிலேயே வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான குருதி சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) முறைகளிலேயே தங்கி வாழ வேண்டிய நிலைக்குப் பல நோயாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், அவர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வது தற்போது ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இப் பொருளாதாரப் பிரச்சினையைக் குறைக்கும் நோக்கில், இந்த மருத்துவ மையம் அனைத்து மருத்துவ வசதிகளையும் உள்ளடக்கிய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத் தொகுப்பொன்றை 50 இலட்சம் ரூபாய் எனும் விசேட சலுகைக் கட்டணத்தில் வழங்குகின்றது.
இத்தகைய நோயாளர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிதிச் சவால்களைக் கருத்திற்கொண்டு, Melstacorp நிறுவனம் தனது பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ், அறுவை சிகிச்சைக்கான மொத்தச் செலவிலிருந்து நேரடியாக 10 இலட்சம் ரூபாயை மருத்துவமனை அறக்கட்டளை மூலம் நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.
இந்த நிதி நிவாரணத்திற்கான தகுதியான நோயாளர்கள், அவர்களின் நிதிப் பின்னணியைக் கருத்திற்கொண்டு ஒரு சுயாதீனக் குழுவன்றின் உன்னிப்பான மதிப்பீட்டிற்கு அமைவாகத் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அரசாங்கத்தின் நெறிமுறைகளுக்கேற்ப சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ அனுமதியைப் பெற்றுக்கொண்டதன் பின்னரே இந்நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் அறுவை சிகிச்சைக்கான அடிப்படைச் செலவு பெருமளவில் குறைக்கப்பட்டு, நோயாளர்களுக்குப் பாரிய பொருளாதார நிவாரணம் அளிக்கப்படுகின்றது.
மனிதனின் உயிரைக் காக்கும் சிகிச்சைக்கு ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது என்பதில் எமது நிறுவனம் உறுதியாக உள்ளது.
நோயாளர்கள் எதிர்கொள்ளும் பயணம், தங்குமிடம் மற்றும் மொழி சார்ந்த சிரமங்களைக் குறைக்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாவதாக, இந்த மருத்துவமனை ராகம் புகையிரத நிலையத்திலிருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால், யாழ்ப்பாணத்திலிருந்து வரும் நோயாளர்களுக்கு நேரடி புகையிரத இணைப்பு மூலம் எளிதாக மருத்துவமனையை வந்தடையும் வசதி உள்ளது.
மேலும், வடமாகாணத்திலிருந்து வரும் நோயாளர்களின் வசதிக்காக மொழித் தடைகள் முழுமையாக நீக்கப்பட்டு, தமிழ் மொழியை சரளமாகப் பேசக்கூடிய பிரத்தியேக மருத்துவ நிபுணர்களும் நோயாளர் நல்வாழ்வு ஒருங்கிணைப்பாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதனால் ஆரம்பப் பரிசோதனைகள் முதல் அறுவை சிகிச்சைக்குப் பிந்திய ஆலோசனைகள் வரை அனைத்தையும் நோயாளர்கள் தங்களது தாய்மொழியிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.
இங்குள்ள சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையமானது, அதிநவீன மருத்துவத் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட புகழ்பெற்ற மருத்துவ மையமாக நாடளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளது என்றும் கூறிய அவர்
0770 113636 என்ற இலக்கத்தின் ஊடாக நேரடியாகத் தொடர்புகொண்டு மேலதிக ஆலோசனை பெற்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
