வடமாகாணத்தில் பகுதியளவில் கட்டப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள 82 பாடசாலைக் கட்டடங்களையும் முழுமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பல பாடசாலைக் கட்டடங்களே இதுவரை முழுமைப்படுத்தப்படாமல் உள்ளதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கட்டடங்களின் பணிகளைத் தொடர்வதற்கான தொழில்நுட்ப அறிக்கைகள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும், தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான கட்டடங்களை 2027ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டங்களில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில வேலைத்திட்டங்கள் மத்திய கல்வி அமைச்சின் பொறுப்பில் உள்ளதுடன், ஒப்பந்த ஆவணங்கள் தங்களிடம் இல்லாத காரணத்தால் சில கட்டடங்களின் பணிகளைத் தொடர்வதில் சிக்கல்கள் இருப்பதாகவும் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள அனைத்து பாடசாலைக் கட்டடங்களையும் முழுமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
கட்டுமானப் பணிகளைத் தொடர்வதில் தடைகள் காணப்படும் கட்டடங்களின் விபரங்களை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வழங்கினால், உரிய தரப்புகளுடன் பேசி அவற்றை முழுமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கைவிடப்பட்டுள்ள பாடசாலைக் கட்டடங்களை முழுமைப்படுத்துவதற்கான செயல் திட்டத்தைத் தயாரித்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்க வடமாகாண கல்விப் பணிப்பாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
Source: https://samugammedia.com/push-to-complete-82-abandoned-school-buildings-in-the-north-1788691954
