Home இலங்கை வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு!

வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு!

0
image

இராணுவம் மறரும் இதர் திணைக்களங்களினால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி 7 மாவட்ட பிரதிநிதிகள் கூட்டுக் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையிலும், வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் நடவடிக்கைகள் ஊடாகவும் தமது பூர்வீக காணிகளை இழந்துள்ள வடக்கு–கிழக்கு மக்கள், தமது காணிகளை மீட்கும் நோக்கில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முக்கியமான கூட்டுக் கலந்துரையாடல் இன்று (28) இடம்பெற்றது.

காணிகளை இழந்த மக்களின் குரலாகவும், அவர்களின் உரிமைகளுக்கான பொதுவான அமைப்பாகவும் செயற்படும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள “ஒன்றுபட்ட அமைப்பு” ஊடாக இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

காணி அபகரிப்பு, காணிகளுக்குள் மக்கள் மீள்குடியேறுவதற்கான தடைகள், வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் பெயரில் பொதுமக்களின் பாரம்பரிய காணிகள் ஆக்கிரமிக்கப்படுதல், உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் காணிகளை இழந்த மக்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரதிநிதிகள் விரிவாக ஆராய்ந்தனர்.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தமது பூர்வீக நிலங்களை மீளப்பெறுவதற்காக மக்கள் பல்வேறு போராட்டங்களையும், சட்டரீதியான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்ற போதிலும், பல பகுதிகளில் இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை எனவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, பாதுகாப்பு தேவைகள் என்ற காரணத்தை முன்வைத்து நீண்டகாலமாக பொதுமக்களின் காணிகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அந்தக் காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பல பகுதிகள் மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக வழங்கப்படாத நிலை தொடர்வதாகவும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதேவேளை, வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் பெயர்களில் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடக்கப்படுவதால், தமது வாழ்வாதாரமும் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காணி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

“ஆட்சி மாறினாலும் நிலை மாறவில்லை” என்று டுட்டிக்காட்டிய பிரதினிதிகள் புதிய அரசாங்கத்தின் காணிக் கொள்கை தொடர்பிலும்  தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

கடந்த கால அரசாங்கங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டியும், மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் கூறியே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் காணி விவகாரத்தில் கடந்த கால அரசாங்கங்களின் அணுகுமுறைகளிலிருந்து வேறுபட்ட நிலைப்பாடு தென்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மக்களின் காணிகளைப் பாதுகாப்பதாகவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், நடைமுறையில் பல இடங்களில் பழைய நிலைமையே தொடர்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

“கடந்த அரசாங்கங்களின் குறைகளை கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கமும், அதே அரசியல் செயற்பாடுகளையே முன்னெடுத்தால், காணிகளை இழந்த மக்களுக்கு நம்பிக்கை எவ்வாறு ஏற்படும்?” என்ற கேள்வியும் கலந்துரையாடலில் எழுப்பப்பட்டது.

வடக்கு–கிழக்கு தழுவிய ஒருங்கிணைந்த செயற்பாடு

காணிப் பிரச்சினை என்பது தனித்தனி மாவட்டங்களின் பிரச்சினையாகப் பார்க்கப்படாமல், வடக்கு–கிழக்கு தழுவிய மக்கள் உரிமைப் பிரச்சினையாக அணுகப்பட வேண்டும் எனவும் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் காணிகளை இழந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வேறுபட்டதாக இருந்தாலும், அவற்றின் அடிப்படை காரணங்களிலும் மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளிலும் பல ஒற்றுமைகள் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே, மாவட்ட ரீதியான போராட்டங்கள் மற்றும் தனிப்பட்ட முயற்சிகளுக்கு அப்பால், அனைத்து பகுதிகளிலும் காணிகளை இழந்த மக்களை ஒருங்கிணைத்து, பொதுவான கோரிக்கைகள் மற்றும் செயற்பாட்டு திட்டங்களின் அடிப்படையில் முன்னோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துதல், தேவையான சந்தர்ப்பங்களில் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், சர்வதேச மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கவனத்திற்கு பிரச்சினைகளை கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் ஆராயப்பட வேண்டும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

தமது பூர்வீக காணிகளில் மீள்குடியேறி, இயல்பு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான உரிமை ஒவ்வொரு மக்களுக்கும் உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்திய பிரதிநிதிகள், அரசாங்கம் காணி விடுவிப்பு மற்றும் காணி உரிமை தொடர்பில் தெளிவானதும் வெளிப்படையானதுமான கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த காணிகளை இழந்த மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்த இந்தக் கலந்துரையாடல், எதிர்காலத்தில் காணி உரிமைப் பிரச்சினைகளை ஒருங்கிணைந்த வகையில் முன்னெடுப்பதற்கான முக்கியமான ஆரம்பமாக அமையும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Source: https://samugammedia.com/people-of-the-north-and-east-unite-as-one-force-to-reclaim-lands-that-were-seized-1787909138

NO COMMENTS

Exit mobile version