அனுராதபுரம் – கோரக்கஹாவேவ பகுதியில் உள்ள வனக் காப்பகத்திற்குள் இன்று (28) காலை பெண்ணொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தாயார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, குறித்த பெண் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வனக் காப்பகப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறைத் தொடர்ந்து, கணவர் கூர்மையான ஆயுதத்தால் மனைவியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, அதே கூர்மையான ஆயுதத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டதாக கூறப்படும் கணவர், பலத்த காயங்களுடன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில்,
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
