நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர்க் கொள்ளளவு 18 சதவீதமாகவும், ஹுருளுவெவ நீர்த்தேக்கத்தின் நீர்க் கொள்ளளவு 24 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
அத்துடன், கவுடுல்ல வாவியின் நீர்க் கொள்ளளவு 20 சதவீதமாகவும், தப்போவ வாவியின் நீர்க் கொள்ளளவு 28 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல மாவட்டங்களில் இன்றும் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை அதிகமாகக் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
கிழக்கு மாகாணம், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் குறிப்பாக நண்பகல் வேளைகளில் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதைத் தவிர்த்து, போதுமானளவு நீரை அருந்தி, உடல் வெப்பத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
