Home இலங்கை வல்வெட்டித்துறை சிலை விவகாரம்: வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!

வல்வெட்டித்துறை சிலை விவகாரம்: வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!

0
image

வெலிக்கடைச் சிறைப் படுகொலையில் உயிரிழந்த தமிழீழ விடுதலை இயக்க (TELO) முக்கியஉறுப்பினர்களான குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் சிலைகளை நிறுவுவதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையை நாளை  வரை நீடித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 25 அன்று நினைவுகூரப்பட்ட இவர்களது 43-வது நினைவுநாளை முன்னிட்டு, குட்டிமணியின் சகோதரரால் அவரது சொந்தக் காணியில் சிலைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

எனினும், இது தொடர்பான நடவடிக்கைகளின் அடிப்படையில், வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் உப தவிசாளர் கந்தசாமி சதீஸ் கடந்த ஜூலை 22 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து சிலை அமைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இது தொடர்பான புலனாய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க அரசுத்தரப்பு சட்டத்தரணியால் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை நாளை வரை ஒத்திவைத்ததோடு, அதுவரை சிலைகளை நிறுவுவதற்கான தற்காலிகத் தடையையும் நீடித்து உத்தரவிட்டது.

இன்றைய வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள கந்தசாமி சதீஸ் சார்பில் மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா மற்றும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட ஐந்து சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். 

மேலும், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் ஞானேந்திரன், சமூக ஆர்வலர் S.கஜந்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் ஈசன் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் க.கணேசகுமாரன் ஆகியோரும் நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்தனர்.

Source: https://samugammedia.com/valvettithurai-statue-issue-case-adjourned-to-tomorrow-1785854421

NO COMMENTS

Exit mobile version