அரசாங்கம் எப்போதும் ஆபத்துகள் நிகழ்ந்து பெரும் சேதம் ஏற்பட்ட பின்னரே விழித்துக் கொள்ளும் பொறுப்பற்ற போக்கினைக் கொண்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும குற்றம் சாட்டினார்.
ஒருங்கிணைந்த கூட்டு எதிர்கட்சி நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,கடந்த காலத்தில் நெல்லுக்கு நியாயமான விலை வழங்குவதாக வாக்குறுதியளித்த அநுர அரசாங்கம், ஆட்சிக்கு வந்த பின் விவசாயிகளை முற்றிலும் புறக்கணித்துள்ளது.
நாட்டில் உள்நாட்டுத் தேவைக்குக் குறைந்த அளவிலான அரிசியே போதுமானது என்ற போதிலும், அளவுக்கு அதிகமாக வெளிநாட்டு அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து பொருளாதாரத்தில் பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
சிறுபோகத்தில் பெருமளவு நெல் உற்பத்தி எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசாங்கம் அதில் மிகக் குறைந்த அளவையே கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதனால் பெருமளவிலான நெல் தனியார் கிடங்குகளிலும் விவசாயிகளின் வீடுகளிலும் தேங்கியுள்ளதுடன், உள்நாட்டு நெல் கொள்முதலும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
தித்வா புயல் எச்சரிக்கை, டெங்கு நோய் பரவல் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையங்களின் முன்னறிவிப்புகள் எதனையும் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்தில் ஓமான் உரம் மற்றும் இந்தியக் கடன் உதவித் திட்டங்கள் மூலம் விவசாயத்துக்கு வளங்கள் சேர்க்கப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கம் எந்தவொரு திட்டமிடுதலும் இன்றிச் செயற்படுகின்றது.
மேலும், டீசல் கப்பல்கள் கொள்முதலில் பெருமளவு நிதி விரயம் செய்யப்பட்டுள்ளதோடு, நாட்டின் பணவீக்கமும் உயர்ந்துள்ளது.
அரசாங்கம் கருவூலத்தை நிரப்பிக் கொண்டு செல்வந்தராக மாறுகின்ற போதிலும், பொதுமக்கள் ஏழைகளாக மாறுகின்றனர் என்றார்.
