திருகோணமலையிலிருந்து வவுனியா நோக்கி சீமெந்து பாரமேற்றிச் சென்ற லொறியொன்று, மஹதிவுல்வெவ பகுதியில் நேற்று மாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று மாலை (11) லொறி பயணித்துக் கொண்டிருந்த போது, எதிரே வந்த மற்றுமொரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாரதி லொறியைச் செலுத்தியுள்ளார்.
அவ்வேளையில், வீதியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து விவசாயிகள் நெல் உலர்த்திக் கொண்டிருந்தமையால், வாகனத்தைச் சீராகச் செலுத்த இடவசதி குறைவாக இருந்துள்ளது. இதன்போது கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது விபத்தினால் லொறியில் ஏற்றி வரப்பட்ட சீமெந்து மூட்டைகள் சரிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.
பொது வீதிகளில் நெல் உலர்த்துவது வாகனப் போக்குவரத்துக்குப் பெரும் இடையூறாக அமைவதோடு, சாரதிகளின் கவனத்தைச் சிதறடித்து இவ்வாறான விபத்துக்களுக்கு வழிவகுக்கின்றது.
எனவே, போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் சாரதிகளின் நலன் கருதி, மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள வீதிகளில் நெல் உலர்த்துவதைத் தவிர்த்து, பாதுகாப்பான ஒதுக்கப்பட்ட இடங்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
