Home இலங்கை வெள்ளத்தில் உடைந்த பாலம்: ஹட்டன் விக்டன் தோட்டத்தில் முடங்கியது பேருந்து சேவை!

வெள்ளத்தில் உடைந்த பாலம்: ஹட்டன் விக்டன் தோட்டத்தில் முடங்கியது பேருந்து சேவை!

0
image

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஹட்டன் – விக்டன் தோட்டப் பிரதான வீதியிலுள்ள சீமெந்து பாலம் உடைந்து போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 பிரிவுகளைச் சேர்ந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தினசரி பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ருவன்புர ஊடாகச் செல்லும் வீதியில் 2 கி.மீ தொலைவிலுள்ள பாலம் சேதமடைந்துள்ளதால், வழக்கமாக இயங்கும் 6 தனியார் பேருந்துகளும் பாலம் வரையிலேயே இயக்கப்படுகின்றன.

பேருந்துகள் நிறுத்தப்படுவதால், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 1 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. கர்ப்பிணிகள், முதியோர்கள் மற்றும் நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர்.

 பாலத்தின் உடைந்த பகுதிவரை தோட்டத்திலிருந்து செல்ல முச்சக்கர வண்டிகள் அதிக கட்டணம் அறவிடுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே பலமுறை உடைந்த இந்தப் பாலத்தைத் தொழிலாளர்களே சேர்ந்து தற்காலிகமாகச் சீரமைத்து வந்தனர். ஆனால் இம்முறை உடைந்த பகுதி மிகவும் பெரியது என்பதால் மக்களால் சீரமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

தேர்தல் காலத்தில் புதுப் பாலம் அமைத்துத் தருவதாக அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இயற்கைச் சீற்றத்தாலும், மோசமான வீதிப் பள்ளங்களாலும் நாளாந்தம் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் விக்டன் தோட்ட மக்கள், நிலையான புதிய பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தோட்ட அதிகாரிகளிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/bridge-collapses-in-flood-bus-service-halted-at-hattons-wicton-estate-1786722909

NO COMMENTS

Exit mobile version