கொழும்பு – கடவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கிச் பயணித்த லொறி பிரதான வீதியிலிருந்து விலகிச் சென்று இன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
கடவத்தையிலிருந்து நுவரெலியாவுக்கு பயணித்த சிறிய ரக லொறி கட்டுப்பாட்டை இழந்து பிரதான விதியிலிருந்து விலகிச் சென்று பள்ளத்தில் கவிழ்ந்ததில், அதன் சாரதி மற்றும் மேலும் இருவர் காயமடைந்து கித்துல்கல பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொல்பிட்டிய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலுகல சிங்கள மகா வித்தியாலயத்திற்கு அருகே இன்று காலை சுமார் 5:30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொல்பிட்டிய பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், விபத்தில் லொறி பலத்த சேதமடைந்ததாகவும் தெரிவித்தனர்.
