11 ஆவது உலகத் தமிழா ராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழி அமைப்பும் இணைந்து நடத்திய தனிநாயகம் நினைவரங்க நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு தொடக்கவுரை ஆற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசியாவில் கோலாலம்பூரிலும், நான்காவது மாநாடு 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றன.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிறுவுநரான தனிநாயகம் அடிகளார் இம்மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். அவர் பங்குபற்றிய இறுதி மாநாடாகவும் இதுவே அமைந்தது.
யாழ். குடாநாடே விழாக் கோலம்பூண்டு பேரெழுச்சியுடன் அந்த மாநாடு நடைபெற்றதாக அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். இம் மாநாட்டின் இறுதி நாளன்று நடந்த தாக்குதலில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட துயரச் சம்பவமும் வரலாற்றில் பதிவாகியிருந்தது.
பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் சிறப்பாக நடந்தேறியிருந்தது. இந்நிலையிலேயே 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம்-2027 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
