ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியனான Magnus Carlsen-ஐ 15 வயதான இந்திய சதுரங்க வீரர் வந்தன் அலங்கார் சவாய் 50 நகர்வுகளில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
2,288 தரவரிசை புள்ளிகளைக்கொண்ட இந்திய வீரர் வந்தன், 2,823 புள்ளிகளுடன் போட்டியில் பங்கேற்ற கார்ல்சனை இரண்டாவது சுற்றில் இவ்வாறு தோற்கடித்தார்.
26ஆவது நகர்வு வரை ஆட்டம் சமநிலையில் இருந்த நிலையில், கார்ல்சன் செய்த முக்கிய தவறை பயன்படுத்திக் கொண்ட வந்தன், தனது சாதகமான நிலையை வெற்றியாக மாற்றினார்.
சர்வதேச மாஸ்டர் (IM) பட்டம்
இந்த வெற்றி குறித்து வந்தன் தெரிவிக்கும்போது, கார்ல்சனுக்கு எதிராக விளையாடுகையில் தன்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் வழக்கமான அணுகுமுறையுடன் நிதானமாக விளையாடியதாகத் தெரிவித்துள்ளார்.
வந்தனின் பெற்றோருக்குக்கூட அவர் கார்ல்சனுடன் விளையாடியது முதலில் தெரியவில்லை. போட்டி குறித்து குடும்பத்தினர் கேட்டபோதுதான் அவர் கார்ல்சனை தோற்கடித்த செய்தியை அறிந்துள்ளனர்.
போட்டியில் வந்தன் மொத்தம் 3 வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பதிவு செய்த நிலையில், நான்காவது சுற்றுக்குப் பின்னர் சோர்வாக உணர்ந்ததால் போட்டியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.
தற்போது தனது முக்கிய இலக்கு சர்வதேச மாஸ்டர் (IM) பட்டத்தை பெறுவதே என வந்தன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், எதிர்காலத்தில் சதுரங்கத்தை முழுநேரத் தொழிலாகத் தொடர்வாரா என்பது குறித்து அவர் இன்னும் முடிவு செய்யவில்லை.
குறிப்பாக, கார்ல்சனின் 2,823 தரவரிசை புள்ளிகளுடன் ஒப்பிடுகையில் 2,288 தரவரிசை புள்ளிகளை கொண்டிருந்த 15 வயது வீரரின் இந்த வெற்றி, அவரது இளம் சதுரங்க வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.
Source: https://ibctamil.com/article/15-year-old-indian-teen-stuns-world-magnus-carlsen-1787723020
