Home இலங்கை 150 வருட பழமையான பாலம் ஆபத்தில் உடனடி புனரமைப்புக்கு மக்கள் கோரிக்கை

150 வருட பழமையான பாலம் ஆபத்தில் உடனடி புனரமைப்புக்கு மக்கள் கோரிக்கை

0
image

தலவாக்கலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை பிரதேச சபையின் கீழ் அமைந்துள்ள ஊட்டுவள்ளி தோட்டத்திற்கு செல்லும் பிரதான நுழைவாயிலில் உள்ள பிரதான பாலம் சுமார் 150 வருடங்கள் பழமை வாய்ந்த இரும்புப் பாலம் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதால், அதனை உடனடியாக புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்ட மக்களின் போக்குவரத்து தேவைகளுக்காகவும், தோட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையை தொழிற்சாலைகளிலிருந்து கொண்டு சென்று ஏற்றுமதி செய்வதற்காகவும் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

1972 காலப் பகுதியில் கம்பெனி தோட்டாக்களை அரசுடமையாக்க பட்ட பின்னர் உரிய முறையில் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில், தற்போது பாலத்தின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன், பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் மற்றும் உலோகப் பகுதிகள் துருப்பிடித்து வலுவிழந்துள்ளன.

மேலும், பாலத்தின் சில பகுதிகளில் உடைந்தும் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளதுடன், பாலத்தின் பாதுகாப்புத் தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால் குறித்த பாலத்தின் ஊடான போக்குவரத்து தற்போது தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பாலத்தை ஊட்டுவள்ளி, பிரேமோர், நல்லதண்ணி, உட்லெக், சின்ன தோட்டம் மற்றும் சென்றெகுலர்ஸ் உள்ளிட்ட பல தோட்டங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் அப் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் நோயாளிகள் கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்கள் முதியோர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக நீண்ட காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

பாலத்தின் போக்குவரத்து தடை காரணமாக முச்சக்கர வண்டி சாரதிகள், வாகன சாரதிகள், பாடசாலை மாணவர்கள், தொழிலுக்கு செல்பவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அவசர மருத்துவ சேவைகளைப் பெற வேண்டிய நோயாலர்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வது, மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வது, தொழிலாளர்கள் தொழில் நிலையங்களுக்கு செல்வது உள்ளிட்ட அத்தியாவசியப் பயணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பாலத்தின் நிலை மேலும் மோசமடைந்தால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல வருடங்களாக பெருந்தோட்ட மக்களின் போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருந்து வரும் இந்தப் பாலம், தற்போது உரிய பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் காணப்படுவது குறித்து மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த பாலத்தை உடனடியாக நேரில் பார்வையிட்டு, தொழில்நுட்ப மதிப்பீட்டை மேற்கொண்டு, அவசர அடிப்படையில் புனரமைப்பு அல்லது புதிய பாதுகாப்பான பாலம் அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.

அத்துடன், புனரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை பொதுமக்களின் அன்றாட போக்குவரத்துக்கு மாற்று பாதுகாப்பான பாதை அல்லது தற்காலிக பாலம் ஒன்றை ஏற்படுத்தி வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அதே வேளை தோட்ட நிர்வாகம் பல்வேறு சிரமத்துக்கு மத்தியில் தடை பட்டுள்ள போக்குவரத்தை சீர் செய்வதற்கு பாலத்தினை புனரமைக்கும் பணியினை முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/150-year-old-bridge-in-danger-public-demands-immediate-renovation-1787723317

NO COMMENTS

Exit mobile version