வத்தளை காவல்துறை பிரிவில் கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (08) காலை சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வத்தளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் காவல்துறையினரின் கட்டளையை மீறிச் சென்ற கார் ஒன்றை வத்தளை காவல் அதிகாரிகள் குழுவினர் துரத்திச் சென்று நிறுத்தி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
கைத்துப்பாக்கி மீட்பு
இதன்போது குறித்த காரின் சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதன்படி, குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் இந்த துப்பாக்கியை மற்றொரு நபரிடம் வழங்குவதற்காக எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த நபரையும் மாபொல பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வத்தளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
