நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள்
அதிகாரத்தை வழங்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளரான கருணாகரன் நாவலன் (Karunakaran Nawalan) வலியுறுத்தியுள்ளார்.
யாழ். (Jaffna) ஊடக அமையத்தில் இன்றையதினம் (06.04.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,“நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்களது வாக்குகள் தத்தமது
பிரதேசங்களை உள்ளடக்கிய தமிழ் தேசிய கட்சிகளை நோக்கியதாகவே இருப்பது
அவசியமானது. இதை மக்கள் உணர்ந்துகொள்வதும் அவசியமாகும்.
தமிழ் மக்களின் உரிமை
ஏனெனில், தமிழ் மக்களின் இருப்பையும் உரிமைகளையும் பறித்து ஜே.வி.பி என்ற
வன்முறைக் குழு இன்று தேசிய மக்கள் சக்தி என்ற போர்வையில் தம்மை
உருமாற்றிக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்ற முற்படுகின்றது.
இந்த வேடதாரிகளின் பொறிக்குள் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்
மக்கள் வீழ்த்தப்பட்டதனால் இன்று தமிழரது உரிமைகள் விடயமாகவோ, அரசியல் கைதிகள்
விடயமாகவோ அன்றி அபிவிருத்திகள் தொடர்பிலோ தீர்வுகள் எதனையும் பெற்றுக்கொள்ள
முடியாது அந்தரிக்கும் நிலையில் இருக்க நேரிட்டுள்ளது.
உள்ளூராட்சி அதிகாரங்கள்
இதைவிட கடந்த காலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றுவந்த மாவட்டங்களின்
ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களைக் கூட இந்த தேசிய மக்கள் சக்தி என்ற ஜேவிபியின்
ஆளுமையற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் உள்ளடங்கிய குழுவினர் குழப்பி
எமது மக்களின் அடிப்படை தேவைகளை கூட தடுக்க முற்படுகின்றனர்.
அனைவருக்கும் சம உரிமை, சட்டங்களும் அனைத்து மக்களுக்கும் சமமானவை, ஊழலை
இல்லாதொழிப்போம் என்று கோசமிட்டு ஆட்சியை பிடித்த இந்த வன்முறைக் குழு இன்று
தமது உண்மையான முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது.
உள்ளூராட்சி அதிகாரங்கள் அந்த இனவாத தேசிய மக்கள் சக்தி என்ற ஜே்விபியினரிடம்
சென்றால் இருக்கின்ற காணி நிலங்கள் கூட எமக்கு இல்லாது போகும் நிலை உருவாகும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
