Home இலங்கை 21 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் கைது – நபருக்கு 6 வருடகால கட்டாய சிறை!

21 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் கைது – நபருக்கு 6 வருடகால கட்டாய சிறை!

0
image

கடந்த 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் மற்றும் அவற்றை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களை சட்டவிரோதமாகத் தன்வசம் வைத்திருந்த குற்றவாளி ஒருவருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 6 வருட கட்டாய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணைகளின் பின்னர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ சதீஸ்தரன் அவர்களினால் இந்த கட்டாய சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணைகளின் போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதிகளான ஆறுமுகம் தனுஷன் மற்றும் கா.நசிகேதன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகி, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மிக வலுவான வாதங்களை முன்வைத்திருந்தனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா அவர்கள், குற்றவாளியின் தரப்பைக் கருத்திற்கொண்டு அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை வழங்குமாறு மன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த போலி நாணயத்தாள் புழக்க முயற்சி என்பது தனிநபர் ஒருவருக்கு எதிரானது அல்லாமல், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கட்டமைப்பிற்கும் எதிரான ஒரு பாரதூரமான துரோகச் செயல் என்பதைத் நீதிமன்றம் கருதுவதாக கௌரவ நீதிபதி அவர்கள் தெரிவித்திருந்தார்.

அத்துடன், இந்த வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் இது ஏற்படுத்தக்கூடிய பேரழிவுகளை ஆழமாகக் கருத்தில் கொண்டு, பிரதிவாதித் தரப்பின் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக் கோரிக்கையை முற்றாக நிராகரித்த நீதிபதி, குற்றவாளிக்கு 6 வருட காலக் கட்டாய சிறைத்தண்டனையைத் தீர்ப்பாக அறிவித்தார்.

Source: https://samugammedia.com/arrested-with-counterfeit-currency-notes-worth-rs-21-million–man-sentenced-to-6-years-of-rigorous-imprisonment-1783684537

NO COMMENTS

Exit mobile version