வன்னிப் பெருநிலப்பரப்பின் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) முல்லைத்தீவில் இடம்பெற்றது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம் ஜெகதீசன், கலையரசி கமலேஸ்வரன், தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் மற்றும் தவராசா அமலன் ஆகியோரும், சமூக ஆர்வலர்களான மணிவண்ணன் நிறோஜன், மரியநாயகம் மரியஎனஸ்ரின் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
பண்டாரவன்னியன் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முல்லைத்தீவு ஒல்லாந்தக் கோட்டையைத் தாக்கி வெற்றியீட்டியதாகக் கூறப்படும் வரலாற்றுச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/bandarawanniyan-is-still-remembered-after-223-years-1787650578
