Home இலங்கை சமூகம் கடற்படையினருக்கு கிடைத்த தகவல்: மன்னாரில் மூவர் கைது

கடற்படையினருக்கு கிடைத்த தகவல்: மன்னாரில் மூவர் கைது

0

மன்னார் (Mannar)  வங்காலை கடற்கரை பகுதியில் பீடி இலை பொதிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (08) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வங்காலை கடற்கரையில் வைத்து ஒரு தொகுதி பீடி இலைகள் கொண்ட பொதிகள் ஏற்றப்படுவதாக கடற்படையினர் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குற்றத்தடுப்பு பிரிவு

குறித்த தகவல்களுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எல்.வை.ஏ.எஸ்.சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக காவல்துறை அத்தியட்சகர்  ஹேரத்தின் வழி நடத்தலில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சில்வா தலைமையில் சென்ற குற்றத்தடுப்பு பிரிவினர் வங்காலை கடற்கரையில் வாகனம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட பீடி இலைகள் ஏற்றப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர்.

80 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 888 கிலோ பீடி இலைகள் மீட்கப்பட்டதோடு மன்னார் பகுதியைச் சேர்ந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பீடி இலை பொதிகள், வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட 03 சந்தேகநபர்கள் வங்காலை காவல்துறையினரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வங்காலை காவல்துறையினர் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களையும், மீட்கப்பட்ட பொருட்களையும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/3-arrested-with-beedi-leaf-packs-in-mannar-1720427039

NO COMMENTS

Exit mobile version