Home முக்கியச் செய்திகள் தீயில் கருகி பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் – வெளியான பின்னணி

தீயில் கருகி பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் – வெளியான பின்னணி

0

சிலாபம் (Chilaw) – சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தமை குறித்து காவல்துறையினர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, குறித்த மூவரும் உயிரிழந்தமையானது கொலையாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் தலைமையக காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

3 பேரின் சடலங்கள் மீட்பு 

நேற்று (20) காலை 6.00 மணியளவில் சிலாபம் – சிங்கபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் தீ பரவியுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சிலாபம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், குறித்த வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்ததாக தெரவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயதான தந்தை சேனாரத்ன, 44 வயதான அவரது மனைவி மஞ்சுளா நிரோஷனி, மற்றும் அவர்களது 15 வயது மகள் நெத்மி நிமேஷா ஆகியோர் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டனர்.

வீட்டின் கீழ் மாடியில் உள்ள படுக்கையில் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்ததாகவும், வீட்டின் வரவேற்பறையில் தந்தை மற்றும் மகளின் சடலங்கள் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உறவினர்கள் கோரிக்கை 

அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்த பெண் சிலாபம் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்பதுடன் அப்பிரதேச அறநெறி பாடசாலையில் ஆசிரியையாகவும் கடமையாற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும், அவரது கணவர் நிலம் மற்றும் போக்குவரத்து வணிகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், மகள் சிலாபம் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயின்று வந்துள்ளார்.

இதேவேளை, இந்த வீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும், இந்த தீ விபத்திற்கு எந்தவித காரணமும் இல்லை என்றும் சம்பவம் குறித்து காவல்துறையினர் முறையான விசாரணை நடத்தி விரைவில் உண்மைகளை கண்டறியுமாறும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் குறித்து ஆதாரங்களின் அடிப்படையில், காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் ஹலவத்தை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பாலித அமரதுங்கவின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version