Home இலங்கை அரசியல் ரணிலை ஆதரித்து முன்னிலையாகவுள்ள 300 சட்டத்தரணிகள்

ரணிலை ஆதரித்து முன்னிலையாகவுள்ள 300 சட்டத்தரணிகள்

0

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) எதிரான வழக்கு இன்று (26) பிற்பகல் 1.00 மணிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக சுமார் 300 பேர் கொண்ட சட்டத்தரணிகள் குழு நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ரணில் விக்ரமசிங்க, அவரது மனைவி மைத்ரி விக்ரமசிங்க (Maithri Wickremesinghe), முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க (Saman Ekanayake) மற்றும் பத்து பேர் கொண்ட குழு இங்கிலாந்தின் லண்டனுக்கு இரண்டு நாள் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில்

இதன்போது 1.66 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிப் புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த வழக்கு இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர், சிரேஸ்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷானி அபேசேகர, ஓஐசி தலைமை ஆய்வாளர் எஸ்.கே. நிதிப் புலனாய்வுப் பிரிவு 03 இன் பொறுப்பதிகாரி சேனாரத்ன, தலைமைப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி நளிந்த ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையின் முன்னேற்றம் அடங்கிய அறிக்கையும் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்த மாதம் 22 ஆம் திகதி அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பதிவு செய்த வாக்குமூலத்தின் சுருக்கமும் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்க உள்ள அதே வேளையில், சந்தேக நபரான ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக சுமார் 300 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு முன்னிலையாக உள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றம்

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இது அறிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சட்டக் குழுக்களும் இந்த வழக்கில் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியின் தேர்தல் அமைப்பாளர்களும் முடிந்தால் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தை காவல்துறையினர் செயற்படுத்தியுள்ளனர்.

பொது ஒழுங்கைப் பராமரிக்க இன்று (26) சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தை செயற்படுத்துமாறு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் ஐஜிபி அறிவுறுத்தியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை கண்காணிப்பாளர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version