Home இலங்கை 4ஆவது ரந்தோலி பெரஹெராவுக்காக கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்

4ஆவது ரந்தோலி பெரஹெராவுக்காக கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்

0
image

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா விழாவின் 4ஆவது ரந்தோலி பெரஹெரா இன்று (26) வீதி உலா வரவுள்ளதுடன், இதற்காக விசேட பாதுகாப்புத் திட்டம் மற்றும் போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஸ்ரீ தலதா மாளிகையினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹெரா விழா ஓகஸ்ட் 18 ஆம் திகதி ஆரம்பமாகி ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை வீதி உலா வருகின்றது. 

இதற்காக இலங்கை பொலிஸாரினால் விசேட பாதுகாப்புத் திட்டமும் போக்குவரத்துத் திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதித் தடைகள், பாதுகாப்பு கடமைகள், வாகனங்கள் மற்றும் நபர்களை சோதனையிடுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

பெரஹெரா காலத்தில் அமுலிலிருக்கும் போக்குவரத்துத் திட்டம் மற்றும் தினசரி போக்குவரத்துத் திட்டம் பின்வருமாறு: 

இன்று (26) 4ஆவது ரந்தோலி பெரஹரா மாளிகையிலிருந்து ஆரம்பமாகி தலதா வீதி, யடினுவர வீதி, குறுக்கு வீதி, கொட்டுகொடெல்ல வீதி, கந்தே வீதி, டி.எஸ். சேனாநாயக்க வீதி, ரஜ வீதி வழியாக சென்று மீண்டும் மாளிகையை அடையவுள்ளது. 

பெரஹெரா மாலை 6.44 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், பெரஹெரா பயணிக்கும் பாதையின் தூரம் 02 கிலோமீற்றர் 180 மீற்றர் ஆகும். 

அக்காலப்பகுதியில் கண்டி நகருக்குள் அமுலிலிருக்கும் போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்றுப் பாதைகள் பின்வருமாறு: 

மாற்றுப் பாதைகள்: 

கட்டுகஸ்தோட்டையிலிருந்து கண்டி நகருக்கு வரும் அனைத்து கனரக வாகனங்களும் மஹையாவ சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக பொலிஸ் சந்தியை அடைந்து கண்டி நகருக்குச் செல்ல முடியும். 

கட்டுகஸ்தோட்டை திசையிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் டி.எஸ். சேனாநாயக்க வீதி வழியாக வந்து, குறுக்கு வீதியினூடாக யடினுவர வீதியை அடைந்து, வலதுபுறம் திரும்பி மீரமக்காம் பள்ளிவாசலுக்கு அருகில் இடதுபுறமாகச் சென்று திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாகப் பயணிக்க முடியும். 

கட்டுகஸ்தோட்டை திசையை நோக்கிச் செல்லும் வாகனங்கள் பொலிஸ் சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக மஹையாவ திசையை நோக்கிச் செல்ல முடியும். 

தென்னேகும்புர மற்றும் அம்பிட்டிய திசையிலிருந்து வரும் வாகனங்கள் சங்கராஜ மாவத்தை வழியாக வேல்ஸ் பார்க் சந்தியை அடைந்து, எஹாலேபொல குமாரிஹாமி மாவத்தையினூடாக வலதுபுறம் திரும்பி போகம்பரை, புகையிரத நிலையத்திற்கு அருகில் வந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் இடதுபுறமாகவும், நகரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் வலதுபுறமாகவும் செல்ல முடியும். 

அத்துடன் ராஜபிஹில்ல மாவத்தை சந்தியிலிருந்து தேவாலயம் வீதி (Church Street) வழியாக கண்டி நகருக்குள் நுழைய முடியும். 

நகரத்திலிருந்து அம்பிட்டிய, தெல்தெனிய வீதியில் பயணிக்கும் வாகனங்கள் கடிகாரக் கோபுர சுற்றவட்டத்திலிருந்து தலதா வீதி வழியாக வந்து, குயின்ஸ் ஹோட்டலின் பக்கவாட்டு வாயிலுக்கு அருகில் போய் படகு சேவைக்கு முன்னால் உள்ள சங்கராஜ மாவத்தை வழியாகச் செல்ல முடியும். 

மேலும், போகம்பரை சுற்றவட்டத்தின் எஹாலேபொல குமாரிஹாமி மாவத்தை, ராஜபிஹில்ல மாவத்தை, வேல்ஸ் பார்க் சந்தி வழியாக சங்கராஜ மாவத்தையினூடாக அம்பிட்டிய மற்றும் தென்னேகும்புர திசையை நோக்கிச் செல்ல முடியும். 

தேவாலயம் வீதியானது இருபுறமும் வாகனங்கள் பயணிக்கக் கூடிய வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு திசையிலிருந்து கண்டி நகருக்குள் நுழைவதற்கும் கண்டி நகரத்திலிருந்து கொழும்பு திசையை நோக்கிச் செல்வதற்கும் வில்லியம் கோபல்லவ மாவத்தை மற்றும் பழைய பேராதனை வீதி ஆகிய இரண்டையும் இருபுறப் போக்குவரத்துக்கும் பயன்படுத்த முடியும்.

Source: https://samugammedia.com/special-traffic-plan-in-kandy-for-the-4th-randoli-perahera-1787718978

NO COMMENTS

Exit mobile version