Home இலங்கை அரசியல் சாணக்கியனை தோற்கடிக்கவுள்ள தமிழரசுக்கட்சி: இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் வெளியிட்ட தகவல்

சாணக்கியனை தோற்கடிக்கவுள்ள தமிழரசுக்கட்சி: இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் வெளியிட்ட தகவல்

0

தமிழரசு கட்சிக்காரர்களே சாணக்கியனை தோற்கடிக்கப் போகின்றார்கள், அவரை தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு தனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு இல்லையென இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பாலையடிவட்டையில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செவ்வாய்கிழமை(17.09.2024) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

 

தொங்கு பாலத்தை கடக்கும் கடினமான பணி

இந்த நாட்டில் பிரச்சினைகள் வந்தபோது நாடு பற்றி எரிந்த போது அதைக் கண்டு பயந்து ஓடிய தலைவர்கள் மீண்டும் ஒரு முறை வந்தால் இந்த நாடு என்னவாகும். தலைவர்கள் என்றால் சவால்கள் வருகின்றபோது அதனை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் அதை இந்த ரணில் விக்ரமசிங்க மாத்திரம் தான் செய்தார் என்றும் பிள்ளையான் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொங்கு பாலத்தை கடப்பது என்பது மிகவும் கடினமான பணி. ஐ.எம்.எப் மூன்றாவது
முறையும் இலங்கைக்கு வர இருக்கிறது. அது சம்பந்தமாக அவர்கள் அறிக்கைகளை விட்டு
இருக்கிறார்கள் நாங்கள் தற்காலிகமான தீர்வு தான் தேடி இருக்கின்றோம்.

நாங்கள்
கடன்பட்ட நாடு கடனை செலுத்துவதாக கூறி இருக்கின்றோம். இன்னும் நிதியை செலுத்த
தொடங்கவில்லை. அதற்காகத்தான் நாம் கால எல்லை வகுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்காக
அஸ்வெசும திட்டத்தின் ஊடாக நிதி உதவி திட்டங்கள் தற்போது வழங்கப்பட்டுக்
கொண்டிருக்கின்றன.

உரத்தட்டுப்பாட்டின் விலையை குறைத்து பணவீக்கத்தை
கட்டுப்படுத்த வேண்டும். வருமானத்தை அதிகரிப்பதற்கு சுற்றுலா துறையை
அதிகரிப்பதற்கு வெளிநாட்டு டொலரை கொண்டுவர வேண்டும்.

 

உள்நாட்டு நிலையான பொருளாதாரம்

உள்நாட்டிலேயே நிலையான
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு உற்பத்தி துறையும், கட்டுமானத்தையும், விவசாயத்துறையையும் அதிகரித்து ஏற்றுமதி பொருளாதாரத்தை கொண்டுவர வேண்டும். இந்த
நிலைமை சாதாரணமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

2025 ஆம் ஆண்டு
நடுப்பகுதியில் இருந்து நாடு இன்னும் முயற்சி அடைந்து அடுத்த கட்ட வளர்ச்சிக்கு
இட்டுச் செல்லும்.

நாட்டை ஒரு தரம் கொடுத்து பார்ப்போம் என்பதற்கு இது ஒரு வெற்றிலை சந்தை அல்ல அல்லது கத்தரிக்காய் வியாபாரம் இல்லை.

ரணில் விக்ரமசிங்க மீண்டும்
ஜனாதிபதியானால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பிராந்தியத்தில்
கட்டுப்பாட்டை கொண்டிருக்கும். அதிகாரத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம்.

அரசியலில் அனைத்தையும் அனுபவித்தவர்கள், நாங்கள் போராடுகின்ற போது அவர்கள்
அனைத்தையும் பெற்றுக்கொண்டவர்கள், மீண்டும் மறைமுகமாக வந்து இதிலே ஆட்சி
செலுத்த பார்க்கிறார்கள்.இந்த நாட்டுக்கு தேவையான இந்த மாகாணத்துக்கு தேவையான
ஆதிகுடிகளாக இருக்கின்ற நாங்கள், கடந்த 30 வருடங்களாக யுத்தம் செய்து அனைத்து
நிர்வாகத்தையும் இழந்து வட மாகாணத்தவர்களின் கதையைக் கேட்டு ஒன்றுமே இல்லாமல்
அழிந்து போன ஒரு சமூகத்திற்கு 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னரான அதிகாரத்தை
வழங்கிக்கொண்டிருக்கின்ற ஒரு இயக்கத்தை அழிப்பதற்கான சதியை நேசிக்கப்போகின்றோமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

எனவே இது ஜனாதிபதி தேர்தல் என்பதுக்கு அப்பால் எமது எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டிய நிலைமை உள்ளது.

மக்கள் மத்தியில் இன்னும் தேவைகள் இருக்கின்றன. இன்னும் பிரச்சினைகள் இருக்கின்றன.
அவற்றை முடிக்க வேண்டும் என்றால் நாடு எமது பக்கம் இருக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி

நாட்டின்
பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். அந்த முயற்சியிலே வருகின்ற வருமானத்திலேயே
பங்கு மட்டக்களப்பு, கிழக்கு மாகாணத்துக்கு வர வேண்டும். அதை பிடிக்கின்ற அகப்பை
எங்களுடைய கையிலே இருக்க வேண்டும். அது இப்போது இருக்கிறது. எதிர்காலத்திலும் அது
இருக்க வேண்டும். இல்லையேல் நாங்கள் எங்களுடைய சமூகத்தை உயர்த்திப் பிடிக்க
முடியாது.

ஏனைய இனங்களுக்கும் மதங்களுக்கும் அநியாயம் செய்கின்ற இயக்கம் அல்ல எமது
இயக்கம். அவர்களுடைய பங்கையும் நாங்கள் கொடுப்போம் இப்போது மட்டக்களப்பில்
இருக்கின்ற அனைத்து கிராமங்களுக்கும் வேறுபாடுகள் இன்றி ஐம்பது இலட்சம் ரூபாய்
நிதி அபிவிருத்திக்காக ஒதுக்கி உள்ளோம்.

ஆனால் அவர்கள் இருந்த காலத்தில் தமிழ்
பிரதேசங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை.

முன்னர் இருந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸின் அமைச்சர்
ஒருவர் தமிழ் பிரதேசங்கள் இருந்த அனைத்து வைத்தியசாலைகளையும் தரம் குறைத்து
இருந்தார். அவர்களுடைய பகுதியிலே இருக்கின்ற அனைத்து வைத்தியசாலைகளும் தரம்
உயர்த்தப்பட்டன.

இவ்வாறான சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்தது.
நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம் எங்கெல்லாம் பிரச்சினை இருக்கின்றதோ
பிரச்சினைகளுக்கு தான் தீர்வு வழங்குவோம். இவ்வாறு பாலையடி வட்டையிலே பிள்ளையான்
பேசியதாக ஏனைய சமூகங்கள் அச்சப்படத் தேவையில்லை.

நீண்ட வரலாற்றைக் கொண்ட எமது இனம். இடையிலே புகுந்த குறுக்கு புத்திகள்
பிடித்தவர்கள் செய்த பணிகள் காரணமாக நாங்கள் அறுந்து போய் கிடக்கின்றோம். அதனை
இன்னும் எம் மத்தியில் கொண்டு வந்து திணிக்க முனைகின்றார்கள்.

சாணக்கியன் சிறுபிள்ளை அவருக்கு கண் பிதுங்குகின்றது அதிகம் வியர்க்கின்றது. வந்தோம் மீண்டும் தோல்வியடைய போகின்றோம் என்பதை அவருக்கு தெரிந்துவிட்டது.

சாணக்கியனுக்கு நம்பிக்கை இருந்தால் சஜித் பிரேமதாசவின் மட்டு சிவானந்தா
மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே ஏறி ஆணைத்தாருங்கள் என்று கேட்டிருக்க
வேண்டும்.

எனவே தமிழரசு கட்சிக்காரர்களே சாணக்கியனை தோற்கடிக்கப்போகின்றார்கள். அவரை
தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு எனது தமிழ் மக்கள் தொகை விடுதலைப்புலிகள்
காட்சிக்கு இல்லை. நாங்கள் எங்களுடைய பணியை செய்வோம் நாங்கள் செயலாற்றுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version