Home இலங்கை 5,000 கி.மீ. தூர பயணத்துக்கு ஒருமுறை பேருந்துகளுக்கு தரப் பரிசோதனை கட்டாயம்

5,000 கி.மீ. தூர பயணத்துக்கு ஒருமுறை பேருந்துகளுக்கு தரப் பரிசோதனை கட்டாயம்

0
image

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், அனைத்து பயணிகள் பேருந்துகளும் 5,000 கிலோமீற்றர் தூரம் பயணித்த பின்னர் தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய வீதிப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மைய காலங்களில் நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளுக்கு சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் வாகனங்களில் காணப்படும் தொழில்நுட்பக் குறைபாடுகள் பிரதான காரணங்களாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய தரப் பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், இதற்காக தகுதியான தரப் பரிசோதகர்களை பணியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முதற்கட்டமாக, தரப் பரிசோதகர்கள் பணியில் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து செப்டெம்பர் மாத இறுதிக்குள் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.இதன்போது, மூன்று மாத காலத்திற்கு பயணிகள் பேருந்துகளுக்கு மட்டும் முன்னோடித் திட்டமாக இந்தத் தரப் பரிசோதனை நடைமுறைப்படுத்தப்படும்.

அதன் பின்னர், நாட்டில் இயங்கும் அனைத்து வகையான வாகனங்களுக்கும் தரப் பரிசோதனையை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீதிப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/mandatory-fitness-test-for-buses-once-for-every-5000-km-of-travel-1785130964

NO COMMENTS

Exit mobile version