Home இலங்கை குற்றம் திருகோணமலை பகுதியில் வாகனத்துடன் எரியூட்டப்பட்ட சடலம்: இரு சந்தேக நபர்கள் கைது

திருகோணமலை பகுதியில் வாகனத்துடன் எரியூட்டப்பட்ட சடலம்: இரு சந்தேக நபர்கள் கைது

0

Courtesy: H A Roshan

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன் மதவாசி வனப்பகுதியில் சடலமொன்று வாகனத்துடன் முற்றாக எரியூட்டப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக உப்பு வெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று(23.07.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்ட செல்வநாயகம் புரம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஜெயரூபன் எனவும் எரியூட்டப்பட்ட வாகனம் அவரின் கெப் ரக வாகனம் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணை

சடலமாக மீட்கப்பட்ட நபர் கடந்த 5 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் அவரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற நிலையில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினால் அவர் தாக்கப்பட்டதாகவும் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்பின்னர், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரில் 48 வயதுடைய சந்தேக நபர்  சம்பவம் நடந்து மறு நாள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 24 வயதுடைய மற்றொரு சந்தேக நபர் இன்று(23) கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், 51 வயதுடைய மூன்றாவது சந்தேக நபரை பொலிஸார் தேடி வருவதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/a-body-cremated-with-the-vehicle-tricomalee-1721730116

NO COMMENTS

Exit mobile version