Home விளையாட்டு வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி: தகுதி பெற்றுள்ள இலங்கை A அணி

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி: தகுதி பெற்றுள்ள இலங்கை A அணி

0

வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் (Mens-t20-emerging-teams-asia-cup) 3 ஆவது முறையாக

இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை A அணி தகுதிபெற்றுள்ளது.

ஓமானில் (Oman) நடைபெற்றுவரும் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இடம் பெற்றது.

இதற்கமைய, இன்று (25) ஓமான், அல் அமரத் விளையாட்டரங்கில் பாகிஸ்தான் (Pakistan) A அணிக்கும் (ஷஹீன்ஸ்) இலங்கை A அணிக்களுக்கிடையிலான அரையிறுதி போட்டி இடம்பெற்றது.

 பாகிஸ்தான் A அணி

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் A அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வுசெய்தது.

பாகிஸ்தான் A அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தான் அணிக்காக  துடுப்பாடிய ஒமைர் யூசுப் 46 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 68 ஓட்டங்கள் குவித்தார்.

இலங்கை A அணியின் பந்துவீச்சில் துஷான் ஹேமன்த நான்கு ஓவர்களில் 21 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், நிபுன் ரன்சிக மற்றும் எஷான் மாலிங்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றினர்.

இலங்கை A அணி

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை A அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யசோதா லங்கா 10 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து வந்த அஹான் விக்ரமசிங்க, லஹிரு உதாரவுடன் இணைந்து 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை A அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் இலங்கை A அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றியிலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இம்முறை வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அஹான் விக்ரமசிங்க ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்களையும், லஹிரு உதார 43 ஓட்டங்களையும், சஹான் ஆராச்சிகே ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் குவித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 3 ஆவது தடவையாக இலங்கை A அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

 3 ஆவது முறையாக

முன்னதாக 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இலங்கை A அணி, குறித்த 2 தொடர்களிலும் சம்பியனாகியது.

இதனிடையே, இந்தத் தொடர் முழுவதும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டுள்ள துஷான் ஹேமன்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இதேவேளை, வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version