மன்னார் (Mannar) மடு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இரண்டாம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர ்காயமடைந்துள்ளார்.
இன்று (29) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒருவர் உயிரிழப்பு
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மடு ஜோதிநகர் இரண்டாம் கட்டை பாலத்தின் அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதன்போது மன்னார் – பெரியகமம் பிரதேசத்தில் வசித்து வரும் 35 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இதேவேளை காயமடைந்த நபர் மன்னார் – பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.