Home இலங்கை அரசியல் மற்றுமொரு இந்திய – இலங்கை ஒப்பந்தம் தேவை: வேண்டுகோள் விடுத்த திலகராஜா

மற்றுமொரு இந்திய – இலங்கை ஒப்பந்தம் தேவை: வேண்டுகோள் விடுத்த திலகராஜா

0

இதுவரை செய்யப்பட்ட ஐந்து இந்திய – இலங்கை உடன்படிக்கைகளிலும் 1987 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஐந்தாவது ஒப்பந்தத்தை மட்டுமே பேசிக் கொண்டு இருக்கும் இன்றைய சூழலில் அதற்கு முன்னதான 1974, 1964, 1954, 1941 ஆகிய ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் நீட்சியாக இன்னுமொரு ஒப்பந்தத்தின் தேவை இப்போது எழுந்துள்ளது என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஆய்வாளருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.

தமிழியல் ஆய்வகம் நடத்தி வரும் மாதாந்தக் கருத்தரங்கம் கடந்த சனிக்கிழமை (27) கொழும்புத் தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வரங்கில் கோ.நடேசய்யர் எழுதிய ‘இந்திய – இலங்கை ஒப்பந்தம்’ (1941) எனும் நூலை முன்வைத்து உரையாற்றியபோதே இத்தகைய பரிந்துரைப்பை ஆய்வு ரீதியாக திலகராஜா முன்மொழிந்துள்ளார்.

மீண்டும் கனடா இந்தியா உறவில் வெடித்தது விரிசல்

வடக்கு – கிழக்கு மக்களுக்கான தீர்வு

தனது ஆய்வுரையில் இன்னுமொரு ‘இந்திய – இலங்கை ஒப்பந்தம் செய்யப்படல் வேண்டும்’ எனும் தனது பரிந்துரைப்புக்கு பின்வருமாறு தனது நியாயப்பாடுகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற ராஜீவ் – ஜே.ஆர். ஒப்பந்தம்தான் இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்வுக்காக மேற்கொள்ளப்பட்டிருப்பது போன்ற ஒரு தோற்றப்பாடு காட்டப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தம் இலங்கையின் வடக்கு – கிழக்கு மக்களுக்கான தீர்வுப் பொதியாக முன்வைக்கப்பட்ட அதேநேரம் அதற்கு முன்பதாக நான்கு இந்திய – இலங்கை ஒப்பந்தங்கள், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள் சார்ந்து செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பிந்திய மூன்றும் (1954, 1964, 1974) இலங்கையில் வாழும் இந்தியர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது சம்பந்தமான ஒப்பந்தங்களாகும்.

ஆனால், 1941 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ‘இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில்’ காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கை நோக்கி வர நேர்ந்த இந்தியர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்துவிட்ட நிலையில் அவர்கள் எவ்வாறு இலங்கையில் நிலை நிறுத்தப்படலாம், இலங்கையர்களாக அங்கீகரிக்கப்படலாம் என்பது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துடன் இணைய தமிழ் எம்பியின் இரகசிய டீல் அம்பலம்

இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினர்

அந்த ஒப்பந்தத்தின் ஊடாக அப்போதைய இந்தியர்கள் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறு இலங்கையர்களாகலாம்? அதற்காக ஒப்பந்தத்தில் உள்ள வாய்ப்புகள் என்ன? என்பதை மலையக நிர்மாண சிற்பி கோ.நடேசய்யர் தனது நூலின் ஊடாக முன்வைத்துள்ளார்.

அவ்வாறு இலங்கையர்களாகிக் கொள்ளாத பட்சத்தில், ஒன்றில் “வெளியேற்றப்படுவீர்கள் அல்லது நிரந்தர கூலிகளாக்கப்படுவீர்கள்” என மிகவும் தீர்க்கக் தரிசனமாக குறிப்பிட்டுள்ளார்.

நடேசய்யர் கூறியது போலவே பின்னாளில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினர்களின் இலங்கைக் குடியுரிமை பறிக்கப்பட்டது, ஒரு பகுதியினர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். எஞ்சியோர் இலங்கையில் நிரந்தர கூலிகளாக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் 1941 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மனதில் இருத்தி மலையகத் தமிழர்கள் சமகால விடயம் சார்ந்து புதியதோர் ஒப்பந்தம் செய்யப்படல் வேண்டும். இந்த புதிய சூழல் நடேசய்யர் எதிர்வு கூறிய அந்த விளைவு நிலையில் இருந்து நோக்கப்பட வேண்டியது.

அதாவது இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட மலையகத் தமிழர்கள் இந்தியாவில் தாயகம் திரும்பிய ‘சிலோன்காரர்களாகவும்’ அகதி முகாம்களில் அகப்பட்டோர் ‘நாடற்றவர்களாகவும்’ வாழ்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உதயமானது புதிய அரசியல் கட்சி!

இந்தியத் தமிழர் அடையாளம்

இலங்கையில் வாழ்வோருக்கு இன்றும் ‘இந்தியத் தமிழர்’ அடையாளம் வழங்கப்பட்டு இலங்கையில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கையில் நிரந்தர கூலிகளாக்கப்பட்டுமுள்ளனர்.

எனவே, இலங்கை – இந்திய நாடுகள் இடையே கூறு போடப்பட்டுள்ள ‘மலையகத் தமிழர் இனம்’ அந்தந்த நாடுகளில் இன்னும் முழுமையான அர்த்தமுள்ள குடியுரிமையாளர்களாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

எனவே, இலங்கையில் வாழும் இந்திய அடையாளம் சுமத்தப்பட்ட மக்கள் முழுமையான இலங்கைப் பிரஜைகளாகவும், இந்தியா ( தாயகம்) திரும்பியவர்களும், அகதி முகாம்களில் வாழும் நாடற்றவர்களாக வாழ்வோரும் முழுமையான இந்திய பிரஜைகளாகவும் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களது மறுக்கப்பட்ட உரிமைகளை அந்தந்த நாடுகளில் வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட வேண்டும்.” – என்று திலகராஜா குறிப்பிட்டுள்ளதோடு இந்தக் கோரிக்கையை வலியுறுத்திய விரிவான நூல் ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் பரவும் புதிய வைரஸ்! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version